16.3.14

நாம் சத்துள்ள உணவு,சத்தில்லாத உணவு என்று எப்படி அறிவது?



உடலின் தன்மைகேற்ப உணவு சத்துள்ளதாகவும், சத்தில்லாததாகவும் மாறுகிறது.வாதப் பிரகிருதி, பித்தப் பிரகிருதி, கபப் பிரகிருதி என்று மூன்று விதங்களாக நமக்கு உடல் அமைகிறது. ஆரோக்கியநிலை, நோய் நிலை இரண்டிலும் பிரகிருதிக்குத் தனிப்பட்ட பத்தியங்களை உபயோகிக்க வேண்டும்.

வாதப் பிரகிருதி :

இந்த பிரதகிருதி உள்ளவருக்கு உடல் வறட்சி, தொட்டால் குளிர்ச்சி, சொரசொரப்பு, கல்லுக் குடல் வாகு.இதற்கு காரணம், துவர்ப்பு, கசப்புச் சுவை கொண்ட மிளகு, மிளகாய், பாகல், சுண்டைக்காய் முதலியவை அதிகமாக சேர்த்துகொள்வது. பொதுவாய் இனிப்பு, புளிப்பு, உப்புச் சுவை, பால், தயிர், வெண்ணெய், பலா, இனிப்பு மாதுளை, வாழை, மா, திராட்சைப் பழங்கள், அரிசி, கோதுமை, உளுந்து, குடலுக்கு எண்ணெய்ப் பசையைத் தரும் நெய் போன்றவை சத்துள்ள உணவாகும். அதிக உடற்பயிற்சி, புணர்ச்சி, இரவு கண்விழித்தல் போன்றவை அபத்தியம். மாமிசம், மீன், முட்டை நல்லதே.

பித்தப் பிரகிருதி :

பித்தப் பிரகிருதியில் உடல்சூடு, மிருதுவான குடல், செம்பட்டை முடி, நல்ல உடல்நிறம் கொண்டவராக இருப்பார். துவர்ப்பு, கசப்பு, இனிப்புச் சுவை கொண்ட காய்கறிகள், பழங்கள், கீரைகள் பத்தியம், புளிப்பு, காரம், உப்புச் சுவை அபத்தியம், மாதுளை, நெல்லிக்காய், வெல்லத்துடன் கலந்த எலுமிச்சைச் சாறு, கரும்புச் சாறு, கடைந்த புதிய மோர் ஆகியவை சத்துள்ள உணவாகும்.

சுப பிரகிருதி :

சுப பிரகிருதியில் உடல்குளிர்ச்சி, தோலில் எண்ணெய்ப் பசை அதிகம். உடல் வழவழப்பு, நல்ல குரல்வளம் கொண்டவராக இருப்பார். கப வியாதிகள் அதிகம் அடிக்கடி பீடிக்கும், சீக்கிரம் உடல் பருமனாகி விடும். கசப்பு, துவர்ப்பு, காரச்சுவையுள்ள காய்கறிகள் பத்தியம், நெய், வெண்ணெய், ஆடைத்தயிர், வெல்லம், கறும்புச்சாறு அபத்தியம் வெறும் வயிற்றில் ஆறிய தண்ணீரில் தேன்கலந்து குடிக்க உடல் இளைக்கும். பகல் தூக்கம் மிகக் கெடுதல், உணவில் கேழ்வரகு, சோளம், கம்பு, கொள்ளு, வரகு தானியங்கள் பத்தியம். அரிசி, கோதுமைகளை விட யவம் என்னும் வார் கோதுமை பத்தியம். இவை அனைத்தும் சத்தான உணவாகும். மாமிசத்தை மிதமாய் உண்ணலாம். மீன், முட்டையைத் தள்ளுபடி செய்ய வேண்டும்.ஆக, பிரகிருதிகளால்தான் உணவு சத்தாகிறது. அல்லது சத்தில்லாமல் போகிறது.

No comments:

Post a Comment