23.2.14

பித்தவெடிப்பை விரட்ட மருத்துவக்குறிப்புகள்


பெரும்பாலானோர் தங்களது முகத்தை அழகு செய்ய செலவிடும் நேரத்தில் பாதியை கூட தங்களது கால் பராமரிப்பிற்காக செலவிடுவதில்லை. ஆண்களுக்கும், பெண்களுக்கும் பாதிப்பையும், கவலையையும் தருவது பாத வெடிப்பு எனப்படும் பித்தவெடிப்பு. இவை ஒரு வகையான பூஞ்சைகளால் வருகிற பிரச்சினையாகும். தோல் இறுகி கடினமாகி வழவழப்பினை இழந்து வெடித்துப் பிளந்து பார்ப்பதற்கே அருவெறுப்பினை தரும். இந்த பிரச்சினை அநேகமாக பத்தில் ஐந்து பெண்களுக்காவது இருக்கிறது. இவற்றிற்கு தற்போதைய நவீன மருத்துவம் நிறைய தீர்வுகளை அளித்தாலும், அவை செலவு பிடிப்பதாகவும், முழுமையான தீர்வினை தருவதாகவும் இல்லை என்பதுதான் உண்மை. இந்த பிரச்சினையை போக்க ஆறு இயற்கை வழிமுறைகள் இதோ உங்களுக்காக…

தண்ணீரை மிதமாக சூடுபடுத்தி, அதில் சிறிதளவு உப்பு மற்றும் எலுமிச்சை சாறு சேர்க்க வேண்டும். அந்த தண்ணீரில் பாதத்தை சிறிது நேரம் வைத்திருந்து, பின், பாதத்தை ஸ்கிரப்பர் போன்ற சொரசொரப்பானவற்றால் தேய்த்து கழுவினால் பாதத்தில் காணப்படும் கெட்ட செல்கள் உதிர்ந்து விடும். இதனால் பித்த வெடிப்பு ஏற்படுவதும் தவிர்க்கப் படுவதோடு, பாதம் மென்மையாகவும் இருக்கும்.

மருதாணி இலைகளை பறித்து,  நன்றாக அரைத்து, பித்த வெடிப்பு உள்ள இடங்களில் தேய்த்து காய விட வேண்டும். பின், தண்ணீரால் கழுவ வேண்டும். இவ்வாறு செய்தால் விரைவில் பித்த வெடிப்பு குணமாகும்.

தரம் குறைவான காலணிகளைப் பயன்படுத்துவதாலும் பித்த வெடிப்பு வருவதற்கான வாய்ப்பு அதிகமாக உள்ளது. எனவே காலணிகள் வாங்கும்போது, டிசைனை மட்டும் கவனத்தில் கொள்ளாமல், தரமானது தானா என்பதை கவனித்து வாங்குவது நல்லது.

விளக்கெண்ணெய், தேங்காய் எண்ணெய் ஆகியவற்றை சமஅளவில் எடுத்துக் கொள்ள வேண்டும். இதில் சிறிது மஞ்சள் தூளை கலந்து பேஸ்ட் போல் குழைத்து, அதை பாதத்தில் வெடிப்பு உள்ள இடங்களில் தடவி சிறிது நேரம் கழித்து கழுவ வேண்டும். இவ்வாறு செய்வதால், பித்த வெடிப்பு குணமாகும்.

வேப்பிலை, மஞ்சள் ஆகியவற்றுடன் சிறிதளவு சுண்ணாம்பு சேர்த்து அரைக்க வேண்டும். இந்த கலவையில் விளக்கெண்ணெய் சேர்த்து, பித்த வெடிப்பு உள்ள இடங்களில் பூசினால், பித்த வெடிப்பு நீங்கும்.

இரவில் தூங்க செல்லும் முன் கால்களை நன்றாக கழுவி, சிறிது தேங்காய் எண்ணெய் தேய்த்து வந்தால், பித்த வெடிப்பு வருவதை தடுக்கலாம். வெடிப்பு வராமல் தடுக்கலாம்.

No comments:

Post a Comment